முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். எலெக்ட்ரிக் கடை உரிமையாளர். இவருக்கும் சாரதி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையி்ல் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 7 வருடங்களுக்கு முன் 6 வயதாக இருந்த தனது பெண் குழந்தையுடன் கணவர்
குமாரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சாரதி சென்றுவிட்டார். உறவினர்களை வைத்து பேசியும் எந்த சமாதானமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் குமார் யாருக்கும் தெரியாமல் லதா என்பவரை கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்த சாரதி, தானும் அவருக்கு பிறந்த 13 வயதாகும் பெண் குழந்தையும் உயிரோடு இருக்கும் போது முறையாக விவாகரத்து பெறாமல் திருமணம் செய்த தனது கணவர் குமார், 2-வது திருமணத்திற்கு உடந்தையாக இருந்த லதா, குமாரின் தாயார் சரஸ்வதி, தங்கை நிர்மலா
அவரது கணவரும் குமாரின் மைத்துனருமான பரமேஸ்வரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் மாணிக்கம் பாளையத்தில் உள்ள வீட்டில் இருந்த குமாரை கைது செய்த மகளிர் காவல் நிலைய போலீசார், இந்திய தண்டனை சட்டம் 147, 294பி, 498ஏ, 494, 495, மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள லதா, சரஸ்வதி, நிர்மலா, பரமேஸ்வரன், ஆகியோரை தேடி வருகின்றனர்.