தமிழ்நாடு

மாமல்லபுரம் கடலின் ராட்சத அலையில் சிக்கிய பள்ளி மாணவி பெற்றோர் கண்முன்னே பலி

webteam

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரை அடுத்த அத்திபலே நகரத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பம், குடும்பமாக ஒரு பேருந்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஆன்மிக யாத்திரை வந்துள்ளனர். இந்நிலையில், கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த அவர்கள், இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.

இதையடுத்து அனைவரும் அங்குள்ள அனைத்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியாக மாமல்லபுரம் கடலில் குளித்துள்ளனர். அப்போது சுமிதா (15) என்ற பள்ளி மாணவி தன் பெற்றோர் மற்றும் ஊர்காரர்களுடன் சேர்ந்து கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது கடல் பலத்த சீற்றமாக இருந்தால் ராட்சத அலையில் சிக்கி சுமிதா நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டார்.

தங்கள் கண் முன்னே மகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு அவரது பெற்றோர், சகோதரி மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து மாமல்லபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாமல்லபுரம் கடலில் சுமிதாவின் உடலை தேடினர். எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. 1மணி நேரத்திற்குப் பிறகு காற்று திசை மாறி வீசியதால் அவரது உடல் மாமல்லபுரம் தெற்கு பக்க கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சுமிதாவின் உடலை பரிசோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து மாணவி இறந்துவிட்டதை உறுதி செய்த மாமல்லபுரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.