தமிழ்நாடு

ரயிலில் மோதி படுகாயமடைந்த ஆண் யானை கவலைக்கிடம்: 7 மணி நேரமாக மருத்துவர்கள் போராட்டம்

webteam

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி படுகாயத்துடன் உயிருக்கு போராடி வரும் காட்டு யானைக்கு சுமார் 7 மணி நேரமாக கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள சின்னாம்பதி, நவக்கரை கிராமங்கள் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளது. இங்குள்ள யானைகள், வாளையாறு ஆற்றில் நீர் அருந்துவதற்காக வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் இரண்டு ரயில்வே தண்டவாளங்களை கடந்து நீர் அருந்த செல்லும.

இந்நிலையில் அதிகாலை 1.30 மணி அளவில் யானை கூட்டம் ஒன்று ஆற்றில் நீர் அருந்த வந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மீது மோதியதில், தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த யானை அங்கேயே விழுந்து கிடந்தது.

இது குறித்து ரயில் ஓட்டுனர் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து கால்நடை மருத்துவ குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் காயம்பட்ட யானைக்கு வலி நிவாரணி மருந்து செலுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து காயம்பட்ட யானைக்கு அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்து சிகிச்சையை துவங்கி உள்ளனர். 7 மணி நேரமாக உயிருக்கு போராடி வரும் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் இடுப்பு பகுதி மிகவும் அடிபட்டு இருப்பதாகவும், முன்னங்கால்கள் நன்றாக அசைவதாகவும், பின்னங்கால்கள் அசைக்க முடியவில்லை என்றும், வால் பகுதியில் உணர்ச்சி இல்லை என்றும், இடது தந்தம் உடைந்து நொறிங்கி விட்டதாகவும், ஆபத்தான நிலையில் யானை இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.