thali chain
thali chain pt desk
தமிழ்நாடு

தாலியை கழற்றச் சொன்ன அதிகாரிகள்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட மலேசிய தமிழ் பெண் - நடந்தது என்ன?

webteam

மலேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி ஆன்மிக சுற்றுலாவுக்காக விமானம் மூலம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு குடியுரிமை சோதனை முடிந்ததும் உடமைகளை எடுக்க சுங்க பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது சுங்க விதிகளின் படி இல்லாமல் கூடுதல் நகைகளை அணிந்து வந்ததாகக் கூறி அவர்களிடம் நகைகளை கழட்டித் தரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

chennai air port

உடனே அந்தப் பெண் “நான் தாலி போட்டிருக்கிறேன். அதனை கழட்டித் தர முடியாது” எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அவரது கணவரின் நகைகளை வாங்கிக் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் மலேசியாவிற்கு திரும்பிச் செல்லும் போது நகைகளை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட கோயில்களுக்குச் செல்ல மலேசியாவில் இருந்து என் கணவருடன் வந்துள்ளேன். ஆனால், சென்னை விமான நிலையத்தில் இரண்டரை மணிநேரம் சுங்க இலாகா அதிகாரிகள் எங்களை அலைக்கழித்தனர்.

கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழட்டச் சொன்னார்கள். முடியாது என நான் வாக்குவாதம் செய்ததால் கணவரின் நகைகளை வாங்கிக் கொண்டனர். எவ்வளவு நகைகள் கொண்டு வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது” எனக் கூறியுள்ளார்.

சுங்க விதிகளின்படி அளவுக்கு அதிகமான நகைகளை அணிந்து வந்தால் உரிய அனுமதி அறிக்கையை தர வேண்டும். ஆனால், எதுவும் தராமல் கொண்டு வந்ததால் நகைகளை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் திரும்ப செல்லும் போது நகைகளை பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டதாகவும் சுங்க இலாகா அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.