இந்தியாவில் மக்கள்தொகை கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து தொகுதி மறுவரையறையை நடத்தினால் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கடந்தமுறை கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன.
இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் மீண்டும் அதே மசோதாவை கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. எனவே இதுகுறித்து விவாதிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் விஜய் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், முதல்வர் விஜயின் இந்த அழைப்பை நிராகரித்து, அந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரான, நமது பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையைத் திமுக நிச்சயம் எதிர்க்கும் என்றும், அதில் எள்ளளவும் எங்களிடம் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.
மேலும் தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையை, நிராகரித்துள்ள தவெக அரசின் இன்றைய கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதுதான் மரபு. ஆனால், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியது விஷமத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல முதல்வர் விஜயின் இந்த அழைப்பை அதிமுகவும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமைக்கு அழைப்பு விடுக்கப்படாமல் எம்.பிக்களுக்கு தனியே அழைப்பு விடுத்ததாலேயே அதிமுகவும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, முதல்வர் விஜயின் கூட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்தவுள்ள 57 எம்.பிக்களில் 37 பேர் இந்த கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளனர். காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, IUML, மதிமுக ஆகிய கட்சிகளின் 20 எம்.பிக்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.