தமிழ்நாடு

பண்டிகை பயணங்களில் ரயில் பயணிகள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகள்- ஒரு பார்வை

webteam

ஆண்டுக்கு சுமார் 10 கோடி பேர் பயணம் செய்யும் ரயில்களில் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தென்னக ரயில்வேயில் ரயில் பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள்..

சொந்த ஊர்களுக்குச் செல்வோர், சுற்றுலா செல்வோர், வேலைக்குச் செல்வோர் என சுமார் 25 ஆயிரம் பேர் நாள்தோறும் தென்னக ரயில்வேவை நாடுகின்றனர். ஆனால் ரயில் பெட்டிகளிலோ கழிவறைகள் சுத்தமாக இல்லை என பயணிகள் முகம் சுழிக்கின்றனர். சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல், குளிர்சாதன பெட்டியில் போர்வைகள் சுத்தமாக இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை ரயில் பயணிகள் அடுக்குகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளின் பெட்டியில் பிறர் பயணிப்பதாகவும், அவசர மருத்துவ உதவி மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் முறையாக எழுதப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. பல ரயில்களில் சுகாதாரமான, தரமான உணவு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தலைவர் பேசுகையில், பண்டிகை காலங்களில் மேலும் கூட்டம் அதிகரித்து விடுவதாகவும், முன்கூட்டியே திட்டமிட்டு கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ரயில் பயணிகள் வைக்கின்றனர்.

தெற்கு ரயில்வேயின் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பேசுகையில், ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு குறைபாடுகளை களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் ரயில் பயணி ஒருவர் கூறும் போது, குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில்களையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அதிக கூட்டம் வருவதால் போதிய அளவு ரயில்களை இயக்கவும் கோரிக்கை விடுத்தார்.