தமிழ்நாடு

மகா சிவராத்திரி: தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி

kaleelrahman

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகா சிவராத்திரி.

இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு மாலை முதல் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தென்னக பண்பாட்டு மையம், அரண்மனை தேவஸ்தானம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தஞ்சை பெரிய கோயில் நந்தி மண்டபம் முன்பு நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் விடிய விடிய நாட்டியமாடினர்.