தமிழ்நாடு

தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகையை மீட்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

kaleelrahman

மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் 67 சவரன் தங்க நகைகள் மாயம் - காவல்துறை விசாரணை.

மதுரை சிம்மக்கல் மணிநகரம் வஉசி தெரு பகுதியில் மதுரை இந்து சாஸ்வதி நிதி லிமிடெட் எனும் பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் நிதி நிறுவனத்தில் பல தரப்பினரும் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்வது மற்றும் லாக்கரில் நகைகளை பத்திரப்படுத்தியும் வைத்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் மேலாளர், கணக்காளர் என 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் வரதராஜன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் தனக்கு சொந்தமான 67 சவரன் தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரதராஜன் குறிப்பிட்ட தொகையை செலுத்தி நகைகளை திரும்ப கேட்டுள்ளார். இதனையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் வரதராஜன் லாக்கரில் இருந்த நகைகளை எடுக்க சென்றனர்.

அப்போது, லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்து மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன மேலாளர் நிர்மலா தேவி 67 சவரன் தங்க நகைகள் மாயமானது குறித்து திலகர் திடல் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தனியார் நிதி நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணி செய்யும் காளிதாஸ் என்பவர் இரண்டு நாட்களாக மாயமாகி இருப்பதும், நிதி நிறுவனத்தில் தங்க நகைகளை எடுத்தல், சரி பார்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், நிதி நிறுவன ஊழியர் காளிதாசை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தனியார் நிதி நிறுவனத்தில் ஒரே வாடிக்கையாளரின் 67 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருப்பதும், ஊழியர் ஒருவர் தலைமறைவாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.