மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் திருச்சியைச் சேர்ந்த ரவி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கருப்பசாமி ஆகிய இருவரும் இணைந்து கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பொருட்காட்சி நடத்தியுள்ளனர். இந்த பொருட்காட்சி முடிந்த நிலையில், இயந்திரங்களை கழற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொருட்காட்சி நடத்த இடத்தின் அருகே உள்ள கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதையடுத்து அங்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பொருட்காட்சியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீபக்குமார் என்பதும் அவரை கொலை செய்து உடலை கல்லைக் கட்டி கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து தீபக்குமாரை கொலை செய்து கிணற்றில் வீசியது யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.