தமிழ்நாடு

ஃபேஸ்புக்கில் லைக்ஸ் அள்ளும் சுமதி யானை : பாசம் காட்டும் பொதுமக்கள்

ஃபேஸ்புக்கில் லைக்ஸ் அள்ளும் சுமதி யானை : பாசம் காட்டும் பொதுமக்கள்

webteam

மதுரையில் உள்ள சுமதி என்ற யானை பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளத்திலும் ஏராளமான பொதுமக்களின் இதயத்தைக் கொள்ளையடித்து வருகிறது. 

மதுரையில் வில்லாபுரத்தில் உள்ள சுமதி என்ற யானை குணத்தாலும், சுட்டித்தனத்தாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. கார்த்திக் நடித்த ‘பாண்டிய நாட்டு தங்கம்’ திரைப்படத்தில் குட்டி யானையாக நடித்து தனது ‌கலைப்பயணத்தை தொடங்கியது சுமதி யானை. தொடர்ந்து, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘நேருக்கு நேர்’, ‘தாஜ்மஹால்’, ‘ஏழாம் அறிவு’ என இது நடித்த படங்களின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘கடைசி விவசாயி’ என பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.

எல்லோரிட‌மும் அன்பாய் ‌பழகும் சுமதி யானை, அப்பகுதி குழந்தைகளுடன் குழ‌ந்தையை போல் விளையாடி மகிழ்வித்து வருகிறது. தங்களோடு சேர்ந்து சுமதி யானை கால்பந்து விளையாடுவது, மவுத் ஆர்கன் வாசிப்பது என அசத்துவதால், அதன் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கூறுகின்றனர். 43 வயதாகும் சுமதி, மதுரையில் உள்ள எண்ணற்ற மக்களின் மனதை ஈர்த்த பெருமைக்கு உரிதாக இன்றளவும் திகழ்கிறது. மதுரை சுமதி என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள பேஸ்புக் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து, சுமதியின் குறும்பை ரசிக்கும் ரசிகர்களாக மாறியுள்ளனர்.

சுமதியை எங்கு அழைத்துச் சென்றாலும், அங்கு ரசிகர்கள் கூடுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். தனது ரசிகர்களை அன்புடன் அரவணைக்கும் வகையில், சிறுவர்களுக்கு ஏற்ப தனது செயல்பாட்டை சுட்டித்தனமாக அந்த யானை மாற்றிக் கொள்வதால் ஏராளமானோர் மனதில் இடம் பிடிப்பதாகவும் சுமதியை வளர்த்து‌ வரும் மதன் பாபு கூறுகிறார். சமீப காலமாக மனிதர்கள் சிலரிடம் மிருக குணத்தை பார்‌த்து வரும் இன்றைய சூழலில் குழந்தைகளிடம் அன்பு காட்டி வரும் சுமதி, விலங்குகளுக்கும் அன்பு உண்டு என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு என சமூக ஆர்வலர்க தெரிவிக்கின்றனர்.