தமிழ்நாடு

மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - ஆர்.பி உதயகுமார் கோரிக்கை

webteam

மதுரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக்க அமைச்சர்  ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் உத்தரவின்பேரில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று மதுரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக்க முதலமைச்சர் மற்றும்  துணை முதலமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்து சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “ இந்தியாவின் இரண்டாம் பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.  சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருக்கும், மாண்புமிகு  துணை முதலமைச்சருக்கும் பணிவான வேண்டுகோள் விடுத்து கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம். தற்போது சூழ்நிலையில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்குவது என்பது தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. குஜராத் அருகே இருந்தாலும் காந்தி நகர் பாதியும், அகமதாபாத் பாதியும் என அரசு அலுவலர்கள் உள்ளன. ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைய உள்ளது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்று தலைநகரங்கள் உள்ளன. பல வெளிநாடுகளில் 2 நகரங்கள் உள்ளன.

அந்த வகையில் மதுரையை இரண்டாம் தலைநகரமாக  முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கருணைகூர்ந்து உருவாக்கினால் தென்மாவட்ட மக்களுக்கு வளர்ச்சி வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.