தமிழ்நாடு

மதுரை: அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த கடைகள் - ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

webteam

மதுரை செல்லூரில் அடுத்தடுத்து கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

மதுரை மாநகர் செல்லூர் அகிம்சாபுரம் நான்காவது தெரு பகுதியில் பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான சில்வர் பட்டறையும் அதனருகே இனிப்பகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை மின்கசிவு ஏற்பட்டு இருகடைகளிலும் திடீரென தீ பற்றத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மள மளவென பரவிய தீயில், கடைகளில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் இயந்திரங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலையடுத்து விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து செல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.