ED Office
ED Office pt desk
தமிழ்நாடு

மதுரை: ED அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை புகார் - காவல்துறை மீண்டும் சம்மன்

webteam

மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல துணை அலுவலகத்தில் பணிபுரிந்த அங்கிட் திவாரி என்ற அதிகாரி திண்டுக்கல் மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் 13 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக டிஜிபியிடம் அமலாக்கத்துறை மதுரை மண்டல துணை அலுவலகத்தின் உதவி இயக்குனர் புகார் ஒன்றினை அளித்தார்.

லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி

அந்த புகாரில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் 35 பேர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருந்தனர், அமலாக்கத்துறை புகாரினை விசாரிக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டதன் பேரில் மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் சார்பாக அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கடந்த வாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சம்மன் அளிக்க சென்றனர், ஆனால் அமலாக்கத்துறை அலுவலர்கள் சம்மனை பெற்றுக் கொள்ளவில்லை.

இதனையடுத்து 2வது முறையாக இன்று காலை 11 மணியளவில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தார்கள். அமலாக்கத்துறை மதுரை துணை மண்டல உதவி இயக்குனர் பிரிஜேஸ் பெனிவால் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தல்லாகுளம் காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் ஆஜராகவில்லை.

கைதுசெய்யப்பட்டஅங்கிட் திவாரி

இதனைத் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த தல்லாகுளம் உதவி ஆணையர் சம்பத் புறப்பட்டுச் சென்றார், உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அமலாக்கத்துறைக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்த நிலையில், இன்று மீண்டும் காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கும் ஆஜராகவில்லையென்றால் அமலாக்கத்துறை புகார் தொடர்பான சட்டப்பூர்வ முடிவை காவல்துறை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகி உள்ளது.