திருமங்கலத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்திய மூதாட்டியிடம் செயினை பறிக்க முயன்று முடியாததால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னகாமு தோட்டத்தில் வசித்து வந்தவர் காவேரி அம்மாள்(55). கணவர் இறந்ததால் குழந்தை இல்லாத காவேரியம்மாள் வீட்டிலேயே சிறிய பெட்டிக் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டின் எதிரே வாடகை வீட்டில் குடியிருந்த கூலித் தொழிலாளியான காதர் பாஷா ஒளி (35) என்பவர் இன்று இரவு எட்டு மணிக்கு மூதாட்டியின் கடையில் பொருட்கள் வாங்குவது போல் அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பொருட்களை வாங்கியவர் அக்கம்பக்கத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாதது அறிந்து மூதாட்டி காவிரி அம்மாளின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த காவேரி அம்மாள் செயினை பறிக்க விடாமல் வாலிபரிடம் சண்டை போட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் காதர் பாஷா கையில் வைத்திருந்த கத்தியை வைத்து மூதாட்டியின் இடது கையிலும் கழுத்திலும் அறுத்ததால் காவிரி அம்மாள் அலறி துடிக்கவே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர, சுதாரித்த காதர்பாஷா அனைவரையும் கத்தியை காட்டி மிரட்டி காயமடைந்த மூதாட்டியை வீட்டுக்குள் இழுத்துச் சென்று வீட்டில் இருந்த சிலிண்டரை திறந்து விட்டு தீயை பற்ற வைத்து வீட்டுக்குள்ளேயே பதுங்கி விட்டான்.
இதனால் அச்சம் அடைந்த அருகில் இருந்தவர்கள் யாரும் உள்ளே போக முடியாத நிலை இருந்ததால் உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு துறைக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்து காயமடைந்த மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் பதுங்கியிருந்த காதர் பாட்ஷாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் காதர் பாட்ஷாவை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காவிரி அம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 5 பவுன் தங்கச் செயினுக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அருகில் குடியிருந்தவரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.