தமிழ்நாடு

மதுரை: கோயில் திருவிழாவில் ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கத்தியால் குத்தி படுகொலை

kaleelrahman

சோழவந்தானில் கோவில் திருவிழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளரை கத்தியால் குத்தி படுகொலை செய்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேனூர் கிராமத்தில் தண்டல்காரராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் பங்கேற்ற பின்பு வைகை ஆற்று பகுதிக்குச் சென்ற அவரை போதை ஆசாமிகள் சிலர் கையில் வைத்திருந்த பணத்தை அபகரிக்க முயன்றனர்.

அதனை தடுத்த ஜோதியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சோழவந்தான் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த நபர்களை தேடி வருகின்றனர்.