MP Su.Venkatesan
MP Su.Venkatesan file
தமிழ்நாடு

அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளை கடந்தும் கட்டப்படாத எய்ம்ஸ் - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்

webteam

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வருவதை அறிந்த தமிழக மக்கள் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை, கடந்த 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

X page

மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 27-ல் பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாவது செங்கல்லை எடுத்து வைக்க இன்று வரை எந்த அமைச்சரையும் அனுப்பி வைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் எய்ம்ஸ் எங்கே? என பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.