செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் என்பவர் ஆன்லைன் மூலம் மதுரை மாநகர காவல் துறை ஆணையருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் இனத் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டது என திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக பிரபாகரனின் பெயரைக் கூறி கட்சி நடத்தி வரும் சீமான், பல லட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வை தூண்டி தவறான பாதையில் அழைத்துச் சென்றுகொண்டு இருக்கிறார். பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளார். பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கோடி கணக்கான தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறார்.
இந்த புகைப்பட மோசடி மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை திரள் நிதி மூலம் திரட்டி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார். எனவே, எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள்நிதி பெற்று பிழைப்பு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த போலியான புகைப்படத்தை உருவாக்கி கொடுத்த இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மற்றும் செங்கோட்டையன் ஆகிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் ஆணையர் மதுரை மாநகர் ஆகியோருக்கு ஆன்லைன் மற்றும் பதிவு தபால் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார்.