செய்தியாளர்: செ.சுபாஷ்
108 வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா, கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
முன்னதாக தேர் தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிந்தா கோஷங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனர்.
தேரடியில் இருந்து கிளம்பிய தேர் பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக வந்து, காலை 8:30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம், க்ரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேரோடும் பாதையில் பக்தர்களுக்கு ஏராளமானோர் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினார்.