தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு

மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு

webteam

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையத்தில் பயிலும் ஆய்வு மாணவி பல்கலைக்கழக பதிவாளரிடம் கடந்த டிசம்பரில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் பேராசிரியர் கர்ண மகாராஜன் மீதான புகாரில் உண்மை உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் பேராசிரியர் கர்ண மகாராஜன் மீது நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அண்மையில் காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் பதவிக்கு பேராசிரியர் கர்ண மகாராஜன் விண்ணப்பித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம் திடீரென நேற்று கூட்டப்பட்டது. ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகார் உறுதி செய்யப்பட்டதால் பேராசிரியர் கர்ண மகாராஜனை கட்டாய ஓய்வுக்கு அனுப்புவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.