நெல்லை தாமிரபரணி ஆற்றை நம் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும். தவறினால் அவற்றை வரைபடங்களில்தான் காண்பிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த சுந்தரவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி சுமார் 125 கிலோமீட்டர் பயணம் செய்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் அருகே கடலில் கலக்கிறது.
தாமிரபரணி ஆற்று நீரால், தூத்துக்குடி , நெல்லை மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் சில பகுதியில் தொழிற்சாலைக் கழிவு நீர் கலக்கிறது. இதனால், தாமிரபரணி ஆறு முழுவதுமாக மாசடைந்துள்ளது. இதனால் அதனை குடிநீராக பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆற்றில் குளிப்பவர்களுக்கு தோல் நோய், கண் எரிச்சல் ஏற்படுகின்றன. தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நவீன இயந்திரங்கள் உதவியுடன் சுத்திகரிப்பு செய்து மறுபயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நோய்கள் பரவாமல் தடுக்கமுடியும். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் ஆற்றங்கரை ஓரங்களில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளியேறும் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. எனவே தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், நவீன இயந்திரங்கள் மூலம் கழிவு நீரை மறுசுழற்சி செய்யவும், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கறிஞரின் கையொப்பம், பெயர் உள்ளிட்டவை இல்லை. இதையடுத்து, அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், " நெல்லை தாமிரபரணி ஆற்றை நம் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும். தவறினால் அவற்றை வரைபடங்களில் தான் காண்பிக்க நேரிடும். இந்த வழக்கினை மிகவும் முக்கியமானதாக நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையரை நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்த்து உத்தரவிடுகிறது.
தாமிரபரணி ஆற்றில் 969 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அகற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது. அடிக்கடி கள ஆய்வுகளையும் மேற்கொள்ளும். ஆகவே தாமிரபரணி ஆற்றில் எங்கெங்கு கழிவுநீர் கலக்கிறது? ஆக்கிரமிப்புகள் உள்ளன? அவற்றை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள், நெல்லை மாநகராட்சி ஆணையர் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.