தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனு தள்ளுபடி

webteam

10 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

மதுரை ரஸ் பவுண்டேஷன் காப்பகத்தின் நிறுவனர் பெர்லின் ஜோஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை சத்திரப்பட்டி அருகே காப்பகம் நடத்தி வருகிறேன். எனது காப்பகத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 18 சிறுவர், சிறுமிகள் தங்கி படித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு எனது காப்பகத்தில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை நான் பாலியல் வன்கொடுமை செய்ததாக என் மீது வழக்கு தொடரப்பட்டது. 

அதில் காவல்துறையினர் என்னைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி மதுரை மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 22 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளேன். எனவே எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர் .சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மனுதாரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி காப்பகத்தின் நிறுவனர் பெர்லின் ஜோஸின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.