தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

webteam

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு குறித்த வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதற்காக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிராதபன் ஆகியோரை இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதித்துறை நடுவரை ஒருமையில், மரியாதைக் குறைவாக, ஏளனமாக பேசியதாக காவலர் பிரபாகரனையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக தாக்கல் செய்தது.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது மூவரும் நேரில் ஆஜராகினர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் ஆகியோர் அரசு வழக்கறிஞருடன் இருந்தனர்.

அரசுத்தரப்பில் கூறும்போது, நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத ASP குமார் மற்றும் DSP பிரதாபன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதித்துறை நடுவரை மரியாதைக் குறைவாக பேசிய காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த 24 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், நீதித்துறை நடுவரின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் மீதான நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை தொடரும். தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.

அரசுத்தரப்பில் அவர்கள் செய்தது தவறு. இருப்பினும், அதிக மன அழுத்தம் காரணமாக எதிர்பாராதவிதமாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், நீதித்துறை நடுவர் தான் விசாரிக்கிறார் என்பது தெரியுமா? தெரிந்தும் ஏன் இவ்வாறு பிரச்சனையை பெரிதுபடுத்தும் விதமாகவே நடந்து கொண்டனர் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மூவர் தரப்பிலும் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டு 4 வாரங்களுக்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் .

தொடர்ந்து நீதிபதிகள், சிபிஐ பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து காவல்துறையினரும் மோசமானவர்கள் அல்ல. ஒரு சிலரின் நடவடிக்கைகளால் இது போன்ற பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது. முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதனடிப்படையில் அதிக காயங்கள் இருப்பதும், வழக்கு பதிவு செய்யவும் முகாந்திரமும் உள்ளது. நீதித்துறை நடுவரின் அறிக்கையில் காவலர் ரேவதி சாட்சி அளிக்கையில் மிகவும் அச்சமடைந்து காணப்பட்டுள்ளார்.

ஆகவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கை பொருத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. சிபிஐ வழக்கு விசாரணையை தொடங்கும் வரை நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தனர். பின்னர், தொடர்ந்த நீதிபதிகள் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு குறித்த வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டு என உத்தரவிட்டனர்.