தமிழ்நாடு

‘பிளாஸ்டிக்கை ஒழிக்க வாழையிலையை பயன்படுத்துங்கள்’ - நீதிபதிகள் 

webteam

வாழையிலை பயன்பாட்டை ஊக்குவிப்பது, கடைகளுக்கு பொருட்கள் வாங்க பை கொண்டு வருவோருக்கு சிறப்பு சலுகைகளை அறிவிப்பது, உள்ளிட்ட முயற்சிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்வதற்கு உதவியாக அமையும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஜூன் 25 அன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் நெகிழி பொருளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை, அரசு ஜனவரி 1 முதல் நடைமுறைபடுத்தியது. மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், சில தினங்களுக்கு மட்டுமே நெகிழிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாளடைவில் சட்டத்திற்கு புறம்பாக நெகிழியை பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் மூங்கில் பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கை பொருட்கள் நலிவடைய தொடங்குகின்றன. விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து கடனாளிகள் ஆகும் நிலை உருவாகி உள்ளது. அதோடு நெகிழி பயன்பாட்டால், சுற்றுச்சூழல் மாசடைவது அதிகரிக்கும். எனவே, நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினரையும் எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில், "பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2018 டிசம்பர் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை 28 லட்சத்து 11 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.  

அதற்கு நீதிபதிகள், “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பெரும்பாலும் மொத்த வியாபாரம் நடைபெறும் இடங்களிலும் ஒருங்கிணைந்த காய்கறி சந்தைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு வியாபாரம் செய்பவர்கள் சிறுவியாபாரிகள். அவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட வாழையிலை பயன்பாட்டை ஊக்குவிப்பது, கடைகளுக்கு பொருட்கள் வாங்க பை கொண்டு வருவோருக்கு சிறப்பு சலுகைகளை அறிவிப்பது, சுய உதவிக் குழுக்கள் மூலமாக துணிப்பைகளை தயார் செய்து வாங்குவதற்கு ஏற்ற விலையில் விற்பது உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுத்தால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்வதற்கு உதவியாக அமையும். 

ஆகவே இது போன்ற முயற்சிகளை முன்னெடுக்க ஆர்வமுள்ள சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து, அது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.