தமிழ்நாடு

தமிழக மின்வாரியம் தொடர்ந்த வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை

webteam

தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை, மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

தமிழக மின் வாரியத்தின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒரு பணியிடம் காலியாகும்போது, அதற்கான நபர்களை தேர்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனடிப்படையில் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கான நபரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தனி நீதிபதி இதனை கருத்தில் கொள்ளாமல், தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: `விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கக்கூடாது’- உயர்நீதிமன்ற கிளை