தமிழ்நாடு

ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பேனர், கட் அவுட் வைக்க தடை 

webteam

தெற்கு ரயில்வேக்கு சொந்தமான அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரையை சேர்ந்த பிரபாகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "உயர்நீதிமன்ற தடையை மீறி ரயில் நிலைய வளாகங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்க மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்ய தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு,  தெற்கு ரயில்வேக்கு சொந்தமான அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே இடங்களில் எவ்விதமான பிளக்ஸ், பேனர்கள், கட் அவுட்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து, “ஏற்கனவே தமிழக அரசு பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளது. அதில் ரயில்வேக்கு விதிவிலக்கு அல்ல. ரயில் நிலையங்கள், ரயில்கள் போன்றவை பொதுமக்களின் வசதியான பயணத்திற்காகவே தவிர சங்கடங்களை உருவாக்குவதற்கு அல்ல.

தொழிற்சங்கங்களோ, கூட்டமைப்புகளோ அதன் நிர்வாகிகளோ இந்த உத்தரவுகளை மீறினால்,  அவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை தெற்கு ரயில்வே 3 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டனர்.