Madurai high court branch
Madurai high court branch pt desk
தமிழ்நாடு

"அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை"– வாடகை பாக்கி வழக்கில் நீதிமன்றம் காட்டம்

webteam

திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமாக இடம், கடந்த 1984-ஆம் ஆண்டு பூம்புகார் கப்பல் கழகத்திற்கு வாடகைக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை ரூ.3 கோடி வரை வாடகை செலுத்தப்படாமல் பாக்கி உள்ளது. எனவே, நிலுவை பாக்கியை உரிய வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

HRNC

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பூம்புகார் கப்பல் கழக வாடகை பாக்கியை அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரிடம் வசூலிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை கப்பல் நிறுவனத்திடம் இருந்து வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராதாகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது, விசாரணையின்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்புராஜ், 80 லட்ச ரூபாய் வாடகை பாக்கியை தருவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய கால அவகாசம் வழங்கும்பட்சத்தில் வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அப்போது, வாடகை பாக்கியை வசூல் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன? 3 கோடி ரூபாய் அளவிற்கு வாடகை பாக்கி வைக்கும் வரை அறநிலையத்துறை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்ததா? அறநிலையத் துறைக்கு சொந்தமான கட்டடத்தில் சாதாரண ஏழை, வியாபாரி இருந்து வாடகை செலுத்தாவிட்டால் அவர்களை ஆக்கிரமிப்பாளர் என வெளியேற்றுவதற்கு தீவிரம் காட்டும் அதிகாரிகள், பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ship

நீதிமன்றம் உத்தரவிட்டும் வாடகை பாக்கியை வசூலிக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் சொத்துகளின் வருமானங்களை இப்படியே விட்டுவிடலாமா? தமிழகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் வேலையை செய்கிறார்களா இல்லையா? அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அரசு நல்ல ஊதியம்தானே வழங்குகிறது. குறைந்த ஊதியம் எதுவும் வழங்கவில்லையே? தங்களின் வழக்கமான பணிகளைகூட அறநிலையத்துறை அதிகாரிகள் செய்யாதது கஷ்டமாக தெரியவில்லையா. அதிகாரிகளின் செயல் மோசமாக உள்ளது.

அறநிலையத்துறை நிலத்தில் 10 லட்ச ரூபாய் வரி பாக்கி வைக்கும் சாதாரண விவசாயி மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவீர்களா? அரசிடம் ஊதியம் பெறும் அதிகாரிகள். யாருக்கு விசுவாசமாக உள்ளார்கள்.

ஒரு தனிநபர் கோயில் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்து வாடகை வசூலிக்க கோரும் அக்கறை அதிகாரிகளுக்கு இல்லையா? நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

court order

எனவே இந்த விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை ஆணையர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.