அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பிப்ரவரி 9ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சிவகங்கையைச் சேர்ந்த இளமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தான் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்ட சிலர் செய்த தவறுக்காக மொத்தத் தேர்வையும் ரத்து செய்வது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எழுத்துத் தேர்வில் தான் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விரிவுரையாளராக நியமிக்கவும், அது வரை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.