தமிழ்நாடு

எய்ம்ஸ் எங்கே?: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

எய்ம்ஸ் எங்கே?: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

webteam

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 15 தென்மாவட்டங்களுக்கு மையப் பகுதியாக விளங்கும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் கேரள மாநில மக்களும் உயர் சிகிச்சை பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு இதுவரை அறிவிக்காததால் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் குறித்து அறிவிக்க மத்திய சுகாதாரத்துறை செயலர் மற்றும் எய்ம்ஸ் இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் செல்வம் மற்றும் ஆதிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 12-ஆம் தேதி‌க்கு ஒத்திவைத்தனர்.