தமிழ்நாடு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு

Rasus

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், “ பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்தத் தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் ரஞ்சித் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சாதி பிளவை ஏற்படுத்தும் வகையில் தான் பேசவில்லை எனவும் நில உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் பேசியதாகவும் எனவே தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா என பா.ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தனர்.

இதனிடையே பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரிய மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது எனக் கூறி பா.ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.