தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் பணியின்போது மதுபோதையில் தடுமாறும் செவிலிய உதவியாளர்! #Video

webteam

மதுரை அரசு மருத்துவமனையின் செவிலிய உதவியாளர் ஒருவர் தன் பணியின்போது மதுபோதையில் தடுமாறும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், நாள்தோறும் தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வெளியேறிவருகின்றனர். அந்த நோயாளிகளுக்கு உதவுவதற்காக ஏராளமான செவிலிய உதவியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அரசு ராஜாஜி மருத்துவமனை எலும்பு முறிவு மற்றும் விபத்து பிரிவில் பணியாற்றும் ஊழியரொருவர், பணியின்போது மதுபோதையில் நடந்துசென்று தரையில் கீழே விழுவது போன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து பிரிவில் நொடிக்கு நொடி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளுக்கு உதவ வேண்டிய செவிலிய உதவியாளர், இதுபோன்று உச்சகட்ட மதுபோதையில் நடக்கமுடியாமல் தடுமாறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் பணியின் போது மது அருந்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மருத்துவமனை டீன் ரத்னவேல் சுற்றறிக்கை விடுத்துள்ள நிலையில், உத்தரவை மீறி இதுபோன்று செவிலிய உதவியாளர் மதுபோதையில் பணியில் செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எலும்பு முறிவு மற்றும் விபத்து பிரிவு உதவி மருத்துவ அலுவலர் முருகப்போர் செல்வியிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட செவிலிய உதவியாளர் பாண்டியராஜன் பணியின் போது இதுபோன்று நடந்தது தொடர்பாக புகார் தனக்கு வந்ததாகவும் மருத்துவமனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.