தமிழ்நாடு

மதுரை: குட்டியுடன் வைகை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நாய்: குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

kaleelrahman

வைகை ஆற்று வெள்ளத்தில் குட்டியுடன் சிக்கிய நாயை,  தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் அருகில் இருந்த மணல் மேட்டில் நாய் ஒன்று தனது ஒருமாத குட்டியுடன் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றின் பாலத்திலிருந்து கயிற்று ஏணி மூலம் மணல் மேட்டில் இறங்கினர். அப்போது புதிய நபர்கள் வருவதை பார்த்த தாய் நாய், குட்டியை விட்டு விட்டு ஆற்றில் குதித்து சிறிது தூரம் நீந்திச் சென்றது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் மணல்மேட்டில் சிக்கியிருந்த நாய்க் குட்டியை பத்திரமாக மீட்டனர்.