செய்தியாளர்: செ.சுபாஷ்
அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓட்டுனர்களும் நடத்துனர்களும் கண்டித்தாலும் அவர்களை மீறி சிலர் தங்கள் உயிரை துச்சமாக கருதி புட் போர்டில், ஜன்னலில் தொங்கிச் செல்கின்றனர். இந்த ஆபத்தான பயண காட்சிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் நேற்று மாலை மதுரை தெப்பக்குளம் பகுதியில் அரசு பேருந்து ஒன்றில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்து படிக்கட்டில் கும்பலாக தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்தில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர் ஒருவர் மீது ஷேர் ஆட்டோ உரசியதில் அந்த மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அரசு பேருந்து படிக்கட்டுகள் மிகவும் மோசமாக உள்ள சூழலில் மாணவர்கள் கும்பலாக ஒரே சமயத்தில் இது போன்று பயணிப்பது பெரும் விபத்தை ஏற்படுத்தும் எனவே காலை மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை அனைத்து வழித்தடங்களிலும் இயக்க வேண்டும் எனவும் அவ்வாறு இயக்கினால் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகம் புதூர் கிளை மேலாளர் கரிகாலனிடம் கேட்டதற்கு, எங்களது டிப்போவில் இருந்து தெப்பக்குளம் மாட்டுத்தாவணி வழித்தடத்தில் இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற டிப்போக்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோ காட்சிகளை பார்த்து விசாரணை மேற்கொள்வதாகவும், கூடுதலாக பேருந்துகளை இயக்க அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.