தமிழ்நாடு

மதுரை விமான நிலைய வாயிலில் கிடந்த கொரோனா கவசஉடை - அச்சத்தில் பயணிகள்!

kaleelrahman

மதுரை விமான நிலைய வாயிலில் ஆபத்தான கொரோனா கவச உடை பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

மிகுந்த கவனத்துடன் அப்புறப்படுத்த வேண்டிய கொரோனா நோய் தடுப்பு கவச உடைகள் பாதுகாப்பற்ற முறையில் மதுரை விமான நிலைய வாயிலில் கிடந்தது. இது பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று நோயால் கடந்த ஒர் ஆண்டாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, புதிய வகை கொரோனா தொற்று பரவி அதிலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மதுரை விமான நிலையம் வழியாக வந்தவர்களில் இதுவரை 156 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்லும் மதுரை விமான நிலைய வாயிலில் நேற்று, பயன்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு கவசஉடை மற்றும் முகக்கவசம் ஆகியவை பாதுகாப்பற்ற முறையில் கிடந்தன.

நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் சிலரும் மதுரைக்கு வந்து சென்ற நிலையில் விமான நிலைய வாயிலில்ட கிடந்த இந்த உடையை பயணிகள் அச்சத்துடனே கடந்து சென்றனர்.


வாயிலில் வைக்கப்பட்டிருந்த காவல்துறை பேரிகார்டு தடுப்பில் சிக்கி காற்றில் பறந்து கொண்டிருந்த அந்த கவசஉடை மற்றும் முகக் கவசத்தை வெகு நேரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


இந்த உடையை விட்டுச் சென்றது பயணிகளா? அல்லது விமான நிலைய பணியாளர்களா? என்பதை விமான நிலைய நிர்வாகம் விசாரிக்க வேண்டும். இனி இது போன்ற நிகழாமல் தடுக்க விமான நிலையத்திற்கு உள்ளேயே தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.