தமிழ்நாடு

மதுரை சித்திரை திருவிழா: தடையை மீறி மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மதுரை சித்திரை திருவிழா: தடையை மீறி மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

kaleelrahman

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, பக்தர்கள் அனுமதியின்றி கோவில் வளாகத்திலேயே நடந்து வருகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி தடையை மீறி பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அதிகமானதால் தமிழகத்தில் மதம் சார்ந்த விழாக்களுக்கும், வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபடவும் தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு, திருவிழா கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து நேத்திக்கடன் செலுத்தி தண்ணீர் பீச்சுவது, மொட்டை அடிப்பது, திரி சுமப்பது உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், மதுரை வைகை ஆற்றில் மொட்டை அடித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டும் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதால் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் தினத்தன்று வைகையாற்றில் ஏராளமானோர் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் நாளை அழகர்கோவிலில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளதால், இன்று பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.