கனிமொழிக்கு கண்ணில் கோளாறு என்று கூறிய முதல்வருக்கு, "கண்ணில் கோளாறு என்றால் சரிசெய்து விடலாம். நீங்கள் தமிழ்நாட்டிற்கே கோளாறு" என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி மதுரையில் தனது இரண்டாம் நாள் பரப்புரையின் இறுதி நிகழ்ச்சியாக மதுரை முனிச்சாலை பகுதியில் வாகன பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியபோது,
"ஸ்டாலின் பரப்புரையின்போது மக்களிடம் கேட்கும் 'நான் ரெடி நீங்க ரெடியா' என்ற கேள்விக்கு, தமிழகம் ரெடியாக இருப்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் அடுத்த கல் தற்போது வரையில் நாட்டியுள்ளனரா..? அடிக்கல் நாயகன்தான் தமிழக முதல்வர்.
தமிழக அரசின் திட்டங்கள் கண்ணில் தெரியவில்லை எனில், கனிமொழிக்கு கண்ணில் கோளாறு என்று கூறும் முதல்வருக்கு, கண்ணில் கோளாறு என்றால் சரிசெய்து விடலாம். ஆனால் நீங்கள் தமிழ்நாட்டிற்கே கோளாறு" என்றார்.
மேலும் பேசிய அவர், “வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இதனால் சில காலங்களில் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமலேயே போய்விடும். தமிழகத்தில் சுயமரியாதை அற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. மொழியை அழிப்பதோடு, தமிழர்களின் பெருமையையும் மறைக்கும் விதமாக கீழடி அகழ்வாராய்ச்சி நடக்கவிடாமல் தடுத்தனர்.
மேலும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் அறிக்கையையும் வெளியிட மறுக்கின்றனர். தொடர்ந்து காரணமே இல்லாமல் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் தங்க காசை முதல்வர் பரிசாக வழங்கினர், தங்கமா தகரா என்று உரசியதற்கு பின்னர் தான் தெரியவந்துள்ளது வழங்கியவரை போன்று காசும் தகரம் என்று.
சுயஉதவி குழுக்களுக்கு சூழல்நிதியை தமிழக அரசு வழங்கவில்லை. கொஞ்சம் நாள் பிரபலமாக இருந்தவர் தற்போது மீண்டும் வந்துள்ளார். யார் கையில் கட்சி செல்ல போகிறது என்று தெரியவில்லை. தற்போது அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்து வருகின்றனர்.
யார் காலில் விழுந்து பதவி ஏற்றாரோ அவர்களுக்கு துரோகம் செய்தவர். தொடர்ந்து தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் துரோகம் செய்து வருகின்றனர். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்று கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வர் ஆனதும் என்ன செய்தார். தமிழகத்தை மீட்டெடுக்கும் நாள் வந்து கொண்டிருக்கிறது. 10 வருட விரும்பத்தகாத அதிமுக ஆட்சியை நிரகரிப்போம்" என்று பேசினார்.