செய்தியாளர்: மணிகண்டபிரபு.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (61). ஜேசிபி வாகனம் வைத்து தொழில் நடத்தி வரும் இவருக்கு, கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பேரூர், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கவிதா மணி என்ற பெண்ணுடன் நட்பாக பழகி பின்னர் அவரை பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி மதுரை புறப்பட்டு வந்த தம்பதியினர், மதுரை மாட்டுத்தாவணி எதிரே உள்ள தனியார் விடுதியில் தங்கினர். இதையடுத்து மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சுற்றி பார்த்துவிட்டு வந்து தங்கிய நிலையில், நேற்று நள்ளிரவு, தனக்கு கடன் இருப்பதாகவும், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்,
இதையடுத்து நீண்ட நேரம் அறைக்கதவு திறக்காமல் இருந்ததால் விடுதி நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் விரைந்து வந்த புதூர் காவல் துறையினர் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது உள்ளே இருவரும் விஷம் அருந்தி இறந்து கிடந்தனர். இதைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு உடலை அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி எதிரே விடுதியில் இரண்டாவது மனைவியுடன் தொழிலதிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.