தமிழ்நாடு

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை

webteam

இறைச்சிகாக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 
மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆஷிக் இலாகி பாபா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், உணவைத் தெரிவு செய்வது அவரவர் தனிப்பட்ட உரிமை; அதில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இந்த சட்டம் கடந்த 1960ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கிறது. எனவே, இந்த புதிய விதிமுறையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கால்நடைகள் விற்பனையை ஒழுங்குபடுத்தவே சட்டம் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் புதிய உத்தரவை அமல்படுத்த 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.