தமிழ்நாடு

`தமிழகத்தில் 180 % குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு’- நீதிமன்றத்தின் அதிர்ச்சி தகவல்கள்!

webteam

குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்கு சென்று வருகின்றனர். `இப்போதெல்லாம் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது’ என சொல்லமுடியாத அளவுக்கு, எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு CACL என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 180 % குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 29% உள்ளனர். 14 முதல் 18 வயது உள்ள குழந்தைகள் 10% உள்ளனர்.

அதில் இந்தியாவில் 2016 வரை 1,75,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவ்வாறு மீட்கப்படும் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசு தரப்பில் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் அதில் பெரும் தாமதம் உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை பெருமளவில் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அதிகரித்து, பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகிறது. ஆகவே, தமிழகத்தில் அதிகரித்த வரும் குழந்தை தொழிலாளர் முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தைகள் சிறப்பு மறுவாழ்வு மையம் அமைத்து, மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் அளித்து அவர்களுக்கான இழப்பீடுகளை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, 

* இந்தியா இல்லாமல் உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறையை எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

* மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது

என கருத்து தெரிவித்து வழக்கு குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைச் செயலர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்றத்தில் இந்தக் கருத்துகள், மிகப்பெரிய அச்சுறுத்தலையே கொடுக்கிறது என வேதனை தெர்விக்கின்றனர் குழந்தை நல செயற்பாட்டாளர்கள். இதுகுறித்து குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் நம்மிடையே பேசுகையில், “குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை தந்திருக்கக்கூடிய கருத்தை மிக ஆழமாக பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பாக 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை, குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 180% உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக  கருத்து தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் பேசும்போது கொரோனா காலகட்டமாக இருந்தாலும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.  இதை மாநில அரசு மட்டுமில்லாமல் அனைத்து துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அரசு சார்ந்த நிறுவனங்கள் கூட குழந்தை தொழிலாளரை பயன்படுத்துவது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.