தமிழ்நாடு

`அவர் இழப்பை எதுவும் ஈடுசெய்ய முடியாது’- காலமானார் மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன்

webteam

மதுரை எய்ம்ஸ் தலைவர் மூத்த மருத்துவர் நாகராஜன் காலமானார். அவருக்கு வயது 76.

மதுரையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் நாகராஜன் வெங்கட்ராமன், கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக்குழுவின் (Ethical committee) தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை தற்போது வகித்து வந்தவர். இவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலருமான டாக்டர்.ராதாகிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

நள்ளிரவு 12 மணியளவில் மாரடைப்பு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் நாகராஜனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “எனது அன்புக்குரிய மாமனார் டாக்டர் வி நாகராஜன் அவர்கள் மறைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று அதிகாலை 12.15 மணியளவில் அவர் மறைந்தார். டாக்டர் வி நாகராஜன் பல சிறந்த கல்வி மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் முன்னணி நரம்பியல் நிபுணராகவும், நெறிமுறைக் குழுவின் தலைவராகவும் இருந்தவர் ஆவார்.

MD, DM, MNAMS, DSC, FRCP Glasgow, FACP (US) என கல்வி நிலைகளில் தேர்ச்சி பெற்றவரும் ஆவார். மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியின் கெளரவப் பேராசிரியராகவும், டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை எய்ம்ஸ் தலைவராகவும் இருந்தார் அவர். அவரது மறைவு எங்கள் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஏற்படுத்திய இழப்பை எதுவும் ஈடுசெய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்