கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் பயணித்த காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மற்றொரு காரும் உளுந்தூர்பேட்டை பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகின.
இரண்டு கார்களும் லேசாக சேதமடைந்த நிலையில் விபத்து குறித்து பேசிய ஆதினம், மாற்று மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டினார் மதுரை ஆதினம், இதற்கு காவல் துறை மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், இரு சமூகத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு சைபர் க்ரைம் போலீஸார் கடந்த 30-ம் தேதி சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் அப்போது ஆஜராகவில்லை.
இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகுமாறு மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறையாக போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த சூழலில் இன்றும் சேத்துப்பட்டு சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல்நிலையத்தில் மதுரை ஆதினம் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரின் தனிச்செயலாளர் செல்வக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஆஜாராகி உள்ளனர். காணொளி மூலம் ஆஜாராக போலீஸார் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை எனவும், கால அவகாசம் வேண்டும் எனவும் மதுரை ஆதீனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.