தமிழ்நாடு

மதுரை: ஆதீனத்திற்கு ஆதரவாக பாஜக பெண் கவுன்சிலர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

kaleelrahman

இந்து மத துறவி மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக கவுன்சிலர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தருமபுரம் ஆதீனத்தில் இம்மாத இறுதியில், பட்டிணப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பை அடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற இருந்த பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், ஆதீனங்கள் மற்றும் ஜீயர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் மதுரை ஆதீனம் தனது கடும் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும், கஞ்சனூர் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்தால் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு ஆதரவாக மதுரையில் வெற்றி பெற்றுள்ள ஒரேயொரு பாஜக பெண் கவுன்சிலரான பூமா ஜனாஸ்ரீமுருகன் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில், "இந்து மத துறவி மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த கயவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அச்சிடப்பட்டுள்ளது.