வளர்த்தவரையே கடித்துக் குதறிய வளர்ப்பு நாய் pt desk
தமிழ்நாடு

மதுரை: வளர்த்தவரையே கடித்துக் குதறிய வளர்ப்பு நாய் - அச்சத்தில் மக்கள்

திருமங்கலத்தில் வளர்ப்பு நாய் கடித்துக் குதறியதில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுசா புரம் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர்கள் கண்ணன் - ஜான்சிராணி தம்பதியினர். இவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் இரண்டு வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை ஜான்சி ராணி, காய வைத்த துணிகளை எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது நாயின் அருகில் இருந்த துணியை எடுக்க முயன்ற போது, திடீரென ஒரு நாய் ஜான்சிராணி மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது. இதில், அவரது இடது கை பலத்த சேதமடைந்தது. இதையடுத்து அலறித் துடித்த ஜான்சிராணியின் குரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தாலும் நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

இதையடுத்து நாயிடம் இருந்து தப்பித்து மாடியில் இருந்து இறங்கி வந்த ஜான்சிராணியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஜான்சிராணியின் இடது கையில் மிகவும் சேதம் ஏற்பட்டிருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.