மதுரையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 800 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநார் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் செல்வம், மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 800 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கண்டன பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எம்ஜிஆர் மன்ற மாநகர மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் உட்பட 800 பேர் மீது தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.