தமிழ்நாடு

மதுரை:”சிறை காவலர்களை தாக்கி தற்கொலை மிரட்டல் விடுத்தார்”..விசாரணை கைதி மீது வழக்குப்பதிவு

webteam

மதுரை மத்திய சிறைச்சாலையில் காவலர்களை தாக்கிவிட்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததாக விசாரணைக் கைதி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மத்திய சிறைச்சாலையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் உள்ளனர். இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாகவுள்ள மகேஷ் சண்முகம் என்பவர் நேற்று முன்தினம் சக கைதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை காவலர்கள் சமரசம் செய்து அறைக்குள் செல்லுமாறு கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த சிறைவாசி காவலர்கள் கண்ணன், பாண்டியன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இருவரையும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று முடி திருத்தம் செய்யும் கத்திரிகோலை எடுத்து தன் கழுத்தில் வைத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மகேஷ் சண்முகம் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து சிறை காவலர்கள் துரிதமாக செயல்பட்டு கத்திரிகோலை அவரிடமிருந்து பறித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை சிறைவாசி மகேஷ் சண்முகம் மீது சிறை காவலர்களை தாக்கியது, தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கரிமேடு காவல் நிலையத்தில் சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் புகார் அளித்ததையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.