தமிழ்நாடு

மதுரை: திருமண வீட்டில் தொங்கிய மின் வயரைத் தொட்ட சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

kaleelrahman

திருமண விழாவிற்காக பொருத்தப்பட்ட அலங்கார மின் விளக்கு மின் வயரை தொட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் - உமாதேவி தம்பதியரின் மகன் ஏழுமலை (12).  இதனிடையே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அங்கு வாழைமரம் கட்டப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஏழுமலை மின்விளக்கு வயரை கையால் பிடித்துள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் ஏழுமலை, உடலில் தீக்காயங்களோடு அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரைத்துரை காவல் துறையினர் திருமண வீட்டில் அலட்சியமாக மின் வயர்களை தொங்கும்படி அமைத்துக்கொடுத்த பந்தல் அமைக்கும் ஊழியர்கள் அபிஷேக் மற்றும் முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.