தமிழ்நாடு

மதுரை: ஓடும் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்

kaleelrahman

மதுரையில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி ஈஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடுமையான பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு ஆம்புலன்ஸில் விரைந்து வந்த மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பு, ஈஸ்வரியை பரிசோதனை செய்தார்.

இதைத் தொடர்ந்து ஈஸ்வரியை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, ஈஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமானதை அடுத்து அவறி துடித்துள்ளார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பு ஆம்புலன்ஸ்லேயே ஈஸ்வரிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில், ஈஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாயும், சேயும் அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் மற்றும் வாகன ஓட்டுநர் இருளாண்டி ஆகியோருக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.