தமிழ்நாடு

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த தடை

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த தடை

rajakannan

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை பேனர், கட்அவுட்களில் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி என்பவர் கட்டடங்கள் குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் கட்அவுட், பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள், கட் அவுட் உள்ளதா என்பதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த தடை விதித்து அதிரடியாக உத்தரவை பிறப்பித்தார். 1959-ம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தை காலச்சூழலுக்கு ஏற்ப அவ்வவ்போது திருத்தவும் தலைமை செயலாளருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றிக்கை அனுப்பவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் விதவிதமாக கட் அவுட்களை வைத்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.