பா.ம.கவின் மாம்பழம் சின்னம் மற்றும் கட்சி உரிமை தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாமகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் தனித்தனி தீவாய் மாறி செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. மேலும் இருதரப்பினர் மோதிக் கொள்ளும் நிலையும் உருவானது. இன்னும் சொல்லப்போனால், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில், கட்சித் தலைவர் பதவிக்காலம் முடிந்த பின்னரும் அன்புமணி ராமதாஸ் போலி ஆவணங்கள் மூலம் உரிமை கோருவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் சின்னத்தை முடக்குவதாகக் கூறிய தேர்தல் ஆணையம், தற்போது அன்புமணியின் முகவரிக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பியதை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. ராமதாஸின் மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூன்று வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் ஆணையிட்டனர். இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்ற அன்புமணி தரப்பு கோரிக்கையை, நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.