வழக்கறிஞர் சினேகா
வழக்கறிஞர் சினேகா PT WEB
தமிழ்நாடு

"நீதிமன்ற உத்தரவு ஏற்கெனவே சாதி மதமற்றவர் என சான்றிதழ் வாங்கியவர்களை பாதிக்காது": வழக்கறிஞர் சினேகா

விமல் ராஜ்

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்குச் சாதி, மதமற்றவர் எனச் சான்றிதழ் வழங்கும்படி தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் வழங்கும் எந்த உத்தரவும் இல்லாத நிலையில், இந்த சான்றிதழை வழங்கும்படி உத்தரவிட முடியாது எனக்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், பள்ளி சேர்க்கை படிவங்கள் உள்ளிட்ட படிவங்களில் சாதி, மதம் குறித்த கேள்விகள் அடங்கியுள்ள பகுதியைப் பூர்த்தி செய்ய விரும்பாதவர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி , சாதி, மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை என்றால் அந்த பகுதியை விட்டு விடலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சாதி, மதமற்றவர் எனச் சான்றிதழ் பெற விரும்பும் மனுதாரரின் விருப்பம் பாராட்டத்தக்கது. அதேசமயம், சாதி, மதமற்றவர் எனச் சான்று பெறும்போது ஏற்படும் பின் விளைவுகளையும் கவனிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டால் எதிர்கால சந்ததியர் இட ஒதுக்கீட்டுப் பலனைப் பெறுவது பாதிக்கப்படும், வாரிசுரிமை சட்டங்களின் மூலம் பலன் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சான்றிதழ்

இது குறித்து பேசிய, சாதி மதம் அமற்றவர் என ஏற்கெனவே சான்றிதழ் வாங்கிய வழக்கறிஞர் சினேகா, "சந்தோஷ் என்ற நபர் சாதி மதம் அற்றவர் எனச் சான்றிதழ் கேட்டு வழக்குப் போட்டுள்ளார். அதில் தாசில்தாருக்கு உத்தரவு போடவேண்டும் எனக் கூறியுள்ளார். அதை, நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

அரசு கொடுத்த மற்றொரு ஜி.ஓ-வில் இதர சான்றிதழ்கள் உள்ளது. அது தாசில்தாரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த சான்றிதழ்களை அவர்கள் வழங்க முடியும் என்பதைப் பற்றி அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. அந்த அடிப்படையில் தான் நான் அந்த சான்றிதழை வாங்கினேன். எனக்குப் பின்னால் 40 பேர் வரிசையாகச் சான்றிதழ்களை வாங்கியுள்ளனர்.

இது மற்ற சட்டங்களை அமல்படுத்தும்போது பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறுகிறார்கள். இந்த சான்றிதழ் வாங்கும் அனைவருக்குமே இதர சலுகைகள் கிடைக்காது எனத் தெரிந்துதான் வாங்குகின்றனர். இந்த இட ஒதுக்கீடுகள் அனைத்தும் எங்களுக்கு வேண்டாம் என எங்களுக்கு எழுதிக் கொடுக்க உரிமை உள்ளது.

உலகில் எந்த மதத்தை வேண்டுமானாலும் பரப்புவதற்கும், பின்பற்றுவதற்கும் உரிமை இருக்கும் இந்த நாட்டில், அதைப் பின்பற்றாமல் இருப்பதற்கும் உரிமை இருக்கிறது. இந்த தீர்ப்பைக் குறிப்பிட்ட சந்தோஷத்திற்காக எடுத்துக்கொள்ளலாமே தவிர, இந்த சான்றிதழ் வாங்கியவர்களை அது பாதிக்காது. கூடுதலாக மற்றவர்களும் சான்றிதழ் பெறலாம் என்பதே என்னுடைய கருத்து" என்றார்.