செய்தியாளர்: V M சுப்பையா
புதுக்கோட்டையைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர், “உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஸொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றனர். அதை கருத்தில்கொண்டு, டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகளை வகுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில் மேலும், “உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை இருந்தாலும் கூட, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை ஏதும் அவர்களுக்கு இல்லை.
பெரும்பாலும் டெலிவரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பது இயலாததாக ஆகி விடுகிறது. சென்னையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஒருவர், டெலிவரி நிறுவனங்களில் சீருடையை அணிந்து வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்ற செயல்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில், டெலிவரி நபர்களை கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் விதிகளை வகுக்கு வேண்டும் என டிஜிபிக்கு மனு அனுப்பி இருந்தேன். ஆனாலும் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக டிஜிபிக்கும், ஸ்விக்கி, ஸொமேட்டோ, டன்ஸோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.